• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருக்கல்யாணம்..,

ByKalamegam Viswanathan

Mar 18, 2025

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து திருக்கல்யாண வைபவத்திற்கு சுந்தரேஸ்வரர் பிரியாவிடை, மீனாட்சி அம்மன் மதுரையிலிருந்து திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளினர்.

அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை, மீனாட்சியம்மன் முன்னிலையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாள் விழாவாக நடைபெற்ற வருகிறது.

பங்குனி பெருவிழாவினை முன்னிட்டு தினமும் சுவாமி காலையிலும் மாலையிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு பட்டாபிஷேகம் நடைபெற்றது விழாவில் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் மற்றும் சேவல் கொடி வழங்கி வேத மந்திரங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் இன்று பகல் 12 மணிக்கு மேல் நடைபெற்றது இதற்காக மதுரையிலிருந்து பிரியா விடை உடன் சுந்தரேஸ்வரர் மீனாட்சியம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் இன்று காலையில் புறப்பட்டு திருப்பரங்குன்றம் கோயில் வந்தடைந்தனர்.சுவாமிகள் மூலக்கரை அருகே உள்ள சந்திப்பு மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தேவானையுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை அடுத்து பகல் 12 30 மணியளவில் கோயில் ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருமண சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள் அங்கு மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் 12 40 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். அதேநேரம் பெண்கள் புதிதாக தங்களது தாலிக்கயிறு மாற்றிக் கொண்டனர்.

தொடர்ந்து வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவின் உச்ச நிகழ்ச்சியாக நாளை காலை 6:00 மணி அளவில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரில் எழுந்தருள்வார். பக்தர்கள் அரோகரா கோஷம் வழங்க வடம் பிடித்து இழுக்கு கிரிவல பாதை வழியாக சுப்பிரமணிய சுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

விழாவினை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் திருப்பரங்குன்றம் கோயிலில் வந்து தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் அறங்காவலர்கள் குழுவினர்கள் கலந்து கொண்டனர்.