திருவில்லிப்புத்தூர் கோட்டை தலைவாசல் அருகே நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கட்டிடச் சுவர்கள்:
திருவில்லிபுத்தூர் கோட்டை தலைவாசல் அருகே ஓட்ட மடம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வரும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டிடம் ஒன்று சிதலமடைந்த நிலையில் காணப்படுகிறது.
இது குறித்து தொல்லியல் ஆய்வாளரும், வரலாற்றுத்துறை உதவி பேராசிரியருமான முனைவர்.போ.கந்தசாமி கூறியதாவது..,
ரைட்டன் பட்டி புது காலணியில் அமைந்துள்ள இந்த கட்டிடம் இடிந்த போதிலும் கட்டிடத்தின் சுவர்கள் தாங்கி நிற்கின்றன. இந்த கட்டிட அமைப்பு நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கட்டுமானவியல் அமைப்பில் கட்டிட சுவர்த்தூண்களின் வேலைப்பாடுகள் அழகாக மிக நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர். இங்கு சில கல் மண்டபத் தூண்களும் சாய்த்து வைக்கப்பட்டுள்ளன. கல் தூண்களில் சிவலிங்கம், நாகம் மற்றும் பூ வேலைப்பாடுகளை செதுக்கியுள்ளனர். இதில் பெரிய கல் தூண் ஒன்றை மண்டபத்தின் முன்புறம் நிறுத்தப்பட்டு வெள்ளை வேட்டி மற்றும் துவாலை உடுத்தி ஒட்ட மடம் முனியான்டி வழிபாடு நடத்தி வருகிறார்கள். கல் தூண்களில் சிற்ப வேலைப்பாடுகளும் பிரதானமாக காணப்படுகின்றன. எண்கோண பட்டைகள் கொண்ட கல் தூண்களும் வடிவமைத்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த மண்டபம் பின் நாளடைவில் சிதலமடைந்து, மண்டபம் சரிந்து சில கல் தூண்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவற்றில் மூன்று கல் தூண்கள் குப்பைகளால் சூழப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சப்பரம் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது வழியில் இந்த மண்டபத்தின் முன்பு இறக்கி வைக்கப்பட்டு, பின்னர் சப்பரம் புறப்பாடு நடைமுறையில் இருந்துள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஆண்டாள் கோவில் மேற்புறத்தில் மினி திருமலை நாயக்கர் மஹால் அமைத்து திருமலை நாயக்கர் இளைப்பாறியதாகவும் வரலாற்று குறிப்புகள் குறிப்பிடுகின்றன. அதே போல் இங்கு அமைந்துள்ள சிறு மண்டபத்தில் திருமலை நாயக்கர் வந்து சென்று இருக்கலாம். அருகிலேயே கோட்டை தலைவாசல் என்ற இந்த பகுதி அழைக்கப்படுவதால் மண்டபம் ஒரு கோட்டையாக இருந்ததா என்ற கோணத்தில் வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. அருகிலேயே தற்போது நாயக்கர் தெப்பம் ஒன்று ஊருக்கு நடுவில் காணப்படுகிறது. பகுதியில் ஏற்கனவே ஆற்றுப் பாதை இருந்துள்ளதாகவும் தற்போது இவை கழிவு நீர் செல்லும் கால்வாயாக மாற்றமடைந்துள்ளது என்றும் கூறுகின்றனர். இவவ்வாறு பேராசிரியர் கந்தசாமி கூறினார்.
