வாடிப்பட்டி பகுதியில் காவல்துறை உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனத்தை இலவசமாக பழுது நீக்க கூறி, ஒர்க்ஷாப் உரிமையாளரை மிரட்டி தாக்கிய காரில் ஏற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் ராயல் என்ஃபீல்டு இரு சக்கர வாகன பழுது நீக்கும் ஒர்க் ஷாப் வைத்திருப்பவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்.

மூன்றாண்டுகளுக்கு முன்பு அதே வாடிப்பட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த அண்ணாதுரை, சீனிவாசன் வைத்திருக்கும் ஒர்க்ஷாப்பில் தனது ராயல் என்ஃபீல்டு பைக்கை பழுது பார்க்க கொடுப்பது வழக்கம் .
அதற்கான வேலை கூலி, பொருட்கள் வாங்கும் பணத்தை தர மறுத்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து வாகனங்களை வேலைக்கு விடுவதும் அதற்கான பணம் ரூபாய்.8600 கொடுக்காமல் இலவசமாக எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
தற்போது பாலமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் அண்ணாதுரை சில மாதங்களுக்கு முன்பு, தனது காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்றொரு காவலர் மூலம் தனது இருசக்கர வாகனத்தை கொடுத்து ஒர்க்ஷாப்பில் பணி செய்ய கூறியுள்ளார்.
அவரும் அந்த வாகனத்தை ஒர்க்ஷாப்பில் பழுது நீக்கம் செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் சீனிவாசன் பழைய பாக்கி இருப்பதாகவும், பழைய பாக்கி தந்தால் மட்டுமே வேலை பார்ப்பதாகவும் கூறி வேலை பார்க்காமல் இருந்துள்ளார்.
பின்பு அண்ணாதுரை தொடர்ந்து சீனிவாசனை தொலைபேசியில் அழைத்து வாகனத்தை வேலை பார்க்குமாறு தொடர்ந்து அழைத்துள்ளார்.
சீனிவாசன், அண்ணாதுரை அழைப்பை எடுக்காததால் கோவம் அடைந்த உதவி ஆய்வாளர் அண்ணாதுரை கடந்த நான்காம் தேதி மதியம் 2:30 மணிக்கு பதிவு எண் தெரியாத வாகனத்தில் சீனிவாசனின் ஒர்க் ஷாப்பிற்கு சென்று சீனிவாசனை வாகனத்தில் ஏறுமாறு மிரட்டி, அவரைத் தாக்கி என் வாகனத்தையா வேலை பார்க்க மாட்டாய். உன் மீது கஞ்சா வழக்கு போட்டுடுவேன் என மிரட்டி வாகனத்தில் ஏற்ற முயற்சித்ததாக கூறப்படுகிறது.

மேலும் தற்போது சீனிவாசனை தாக்கி அண்ணாதுரை வாகனத்தில் ஏற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து சீனிவாசன் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் முதல்வர் தனிப்பிரிவு மனித உரிமை கழக ஆணையம் என பல்வேறு துறைக்கு புகார் மனு அளித்து உதவி ஆய்வாளர் அண்ணா துரையின் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.
காவல்துறை உதவி ஆய்வாளர் தனது இருசக்கர வாகனத்தை இலவசமாக பழுதி நீக்குமாறு ஒர்க்ஷாப் உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.