அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், ஞானசேகரனின் கூட்டாளியான குற்ற வழக்குகளில் தொடர்புடைய திருப்பூரைச் சேர்ந்தவரை பிடிக்க சிறப்பு புலனாய்வுக்குழு முடிவு செய்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. . இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்ததுடன் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இவ்வழக்கில், ஞானசேகரனின் கூட்டாளியான திருப்பூரை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவர் இருக்கிறார் என்பதை சிறப்பு புலனாய்வு குழுவினர் கண்டறிந்துள்ளனர். அவரை பிடித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மாணவியைத் தவிர்த்து 4 பேர் உள்ளனர் என தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் புகாரை பெற்று விசாரிக்கவும் சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது. அத்துடன் ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்கள் மற்றும் மாணவிகள் என 4 பேரை சிறப்பு குழு கண்டறிந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், அவர்களை பற்றிய தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.