ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினார். இந்த மோதலால் கெலாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டது
இந்தநிலையில், ராஜஸ்தான் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைவரும் ராஜினாமா செய்தனர். புதிய அமைச்சரவை பதவி ஏற்பதற்காக அனைத்து மந்திரிகளும் பதவி விலகினர்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய அமைச்சரவை இன்று மாலை பதவி ஏற்றது. 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆட்சி பொறுப்பு ஏற்றப்பிறகு கெலாட் மந்திரிசபை முதல் முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 11 பேர் கேபினட் மந்திரிகளாகவும், 4 பேர் இணை மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். 12 பேர் புதுமுகங்கள் ஆவார்கள். அனைவருக்கும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.