சோழவந்தானில் மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள மேலக்கால், திருவேடகம், தச்சம்பத்து, தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம் குருவித்துறை, இரும்பாடி, கருப்பட்டி நாச்சிகுளம், கரட்டுப்பட்டி, ரிஷபம் ராயபுரம், கீழ மாத்தூர், துவரிமான், தேனூர் , சமயநல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பேருந்துகளில் வந்து செல்கின்றனர். இவர்களுக்கான பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர். ஆகையால் அரசு போக்குவரத்துக் கழகம் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். அனைத்துபேருந்து நிறுத்தங்களிலும் நிறுத்தி மாணவிகளை அழைத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக மாலை 4 மணி முதல் 5 மணி வரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல அறிவுறுத்த வேண்டும். அதே நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக 4:00 மணி முதல் 5 மணி வரை சோழவந்தான் அரசு பெண்கள் பள்ளி அருகில் விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






