சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த பள்ளிபாளையம் முன்னாள் ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் உட்பட மூன்று பேர் கைது செய்து, விற்பனைக்காக இருந்த 200-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 40க்கும் மேற்பட்டோர் பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவர்மன் மற்றும் பள்ளிபாளையம் போலீசார் இணைந்து அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் பள்ளிபாளையம் அடுத்த பெரியகாடு பகுதியில் இயற்கை தாபாவில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்ற போலீசார், மது விற்பனையில் ஈடுபட்ட திமுகவை சேர்ந்த பள்ளிபாளையம் முன்னாள் ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் துரைராஜ்பெருமாள், மனோகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர், அதேபோல் பெரியார் நகர் பகுதிகளிலும் சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக சுப்பிரமணி என்பவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 200க்கும் அதிகமான மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்