புதிய அணைக்கட்டும் கேரளா அரசின் சுற்றுச்சூழல் விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரிக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கிட வேண்டும், முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கேரள அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்திலிருந்து வருமான வரித்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர், போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் கேரளா அரசின் செயல்பாட்டால் அதிர்ச்சி அடைந்த விவசாயி பஞ்சனாதன் உயிரிழந்தது போல நடித்துக் காட்டப்பட்டது, அப்போது உயிரிழந்ததாக கருதப்பட்ட விவசாயி பஞ்சநாதனை சுற்றி மற்ற விவசாயிகள் மாரடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், கேரளா அரசு வெளியிட்ட புதிய அணை கட்டும் அரசாணையை விவசாயிகள் தீயிட்டு எரித்தனர், இந்த முற்றுகை போராட்டத்தில்பல்வேறு விவசாய சங்கங்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ரஷ்யா மதுரையர்கள் இயக்கத்தினர் பல்வேறு சங்கங்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன் கூறுகையில்..,
“கேரளா அரசு புதிய அணை கட்டும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் விண்ணப்பத்தை பரிசீலிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்துள்ளது, மத்திய அரசு கேரளா அரசின் சுற்றுச்சூழல் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும், கேரளா அமைச்சர்கள் அவ்வப்போது அத்துமீறி நுழைந்து அவ்வப்போது தண்ணீரை திறந்து விடுகிறார்கள் என்றார்.