• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

May 20, 2024

நற்றிணைப்பாடல்: 373

முன்றிற் பலவின் படு சுளை மரீஇ,
புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தை
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி,
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
சூருடைச் சிலம்பின் அருவி ஆடி கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப்
பா அமை இதணம் ஏறி, பாசினம்
வணர் குரற் சிறு தினை கடிய,
புணர்வதுகொல்லோ, நாளையும் நமக்கே?

பாடியவர்: கபிலர் திணை:

பொருள்:

தோழீ! இன்று அன்னை நம்மை நோக்கி ஐயப்பாடெய்தி இல்வயிற் செறிப்பக் கருதியதனால் மெல்லிய தலையையுடைய மந்தி இல்லின்முன்புள்ள பலாமரத்திலிருந்து அதன் பழத்தைக் கீண்டு நிறைந்த சுளைகளை யுண்டு அவற்றின் வித்தினைக் கீழே யுதிர்ப்ப; அயலிலே நின்ற கொடிச்சி தன் தந்தையினது மேகந்தவழும் கரிய மலைவளம் பாடி வெளிய ஐவன நெல்லைக் குத்துகின்ற மலைநாடனாகிய நம் காதலனொடு; அச்சஞ் செய்யும் மலைப்பக்கத்திலுள்ள அருவியாடிக் கரிய நிறத்தையுடைய அரும்பு மலர்ந்த சோதிடம் வல்லார் போன்ற வேங்கை மரத்தின்மேலே கட்டிய; பரப்பமைந்த பரண்மீது ஏறி; வளைந்த கதிர்களையுடைய சிறிய தினைப்புனத்தின்கண்ணே வருகின்ற பசிய கிளியினத்தைக் கடிந்து போக்குமாறு; இன்றிருந்தது போல நாளையும் நமக்குப் பொருந்துவதாமோ? அங்ஙனம் பொருந்தாது போலும்.