தேனி மாவட்டம், ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 562 ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் ரூ.4.92 கோடி மதிப்பிலான தாலிக்கு தங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, வழங்கினார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), திரு.ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), திரு. கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது,
தமிழ்நாட்டின் ஏழைப் பெண்களின் திருமண உதவிக்காக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவாக, முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1989-இல் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காகவும், கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காகவும் சமுதாயத்தில் சம உரிமை வழங்கிடுதல் என பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
பெண்கள் சமூகத்தில் சுய மரியாதையோடு வாழ்வதற்கும் அங்கீகாரம் அளிப்பதற்காகவும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட்டு குடும்ப தலைவிகள் வங்கி கணக்கில் மாதம் ரூ.1000/- செலுத்தப்பட்டு வருகிறது. மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள்.
இன்றையதினம் நடைபெறும் விழாவில், 2023-2024 ஆம் நிதியாண்டில் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பட்டம் மற்றும் பட்டயம் முடித்த 334 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/- வீதம் ரூ.1.67 கோடியும், பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை முடித்த 228 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- வீதம் ரூ.57 இலட்சம் நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
மொத்தம் 562 பயனாளிகளுக்கு ரூ.2.24 கோடி மதிப்பிலான நிதியுதவியும், தலா 8 கிராம் தங்க நாணயம் வீதம் 4,496 கிராம் தங்க நாணயங்கள் ரூ.2.68 கோடியும் என மொத்தம் ரூ.4.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பெண்கள் உயர்கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் வகையில் 2022 ஆண்டு முதல் புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் மட்டும் 2669 மாணவிகளின் வங்கிக்கணக்கில் மாதம் ரூ.1000 செலுத்தப்பட்டு உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்து வருகிறது.
பெண்கள் தங்களது குடும்பத்தை சுயமாக வழிநடத்த தேவையான அனைத்து உதவிகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வருகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, நகர்மன்றத் தலைவர்கள் திருமதி ரேணுபிரியா பாலமுருகன் (தேனி-அல்லிநகரம்), திருமதி அய்யம்மாள் (சின்னமனூர்), ஊராட்சிக்குழுத் தலைவர்கள் .சக்கரவர்த்தி (தேனி), .தங்கவேல் (பெரியகுளம்), திருமதி இன்பென்ட் பனிமயஜெப்ரின் (உத்தமபாளைம்) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பரங்குன்றத்தில் வைகாசி 7 நாள் திருவிழா !
- அ.புதுப்பட்டி கிராமத்தில் கோடைகால இலவச கபடி பயிற்சி
- பெரம்பலூர் மாவட்டத்தில், தி.மு.க.வில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை
- திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை
- நத்தம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர் கால் முறிவு