• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதான பணிகள் அமைச்சர்கள் நேரில் ஆய்வு..!

ByKalamegam Viswanathan

Nov 25, 2023
அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதான பணிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில்  பிரமாண்டமாக தயாராகி வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தின் கட்டுமான பணிகளை  பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்  எ.வ.வேலு, மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் மாதத்திற்குள் மைதானத்தின் கட்டுமான பணிகளை  நிறைவு செய்யுமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர், தென் தமிழக பகுதிகளிலே தமிழர்களின் பாரம்பரியத்தின்  அடையாளமாக திகழ்கிற ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக உலக தரத்தில் புதிய ஜல்லிக்கட்டு அரங்கு அமைக்கப்படும் என, சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார்  அதன்படி, அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் ரூ.44 கோடி திட்ட மதிப்பீட்டில் ஏறத்தாழ 16 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைந்து வருகிறது.  இதில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பரிசோதனைக் கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், மாடுபிடி வீரார்கள் உடை மாற்றும் அறை, தற்காலிக விற்பனைக் கூடங்கள்,  தங்கும் அறைகள் என சிறப்பான முறையில் அரங்கம் அமையவுள்ளது.   இப்பணிகள், விரைவாகவும் தரமாகவும் நடைபெறுகிறதா என்பது குறித்து அமைச்சர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தனர் 
இந்நிகழ்வில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா,  சட்டமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.