• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

சொத்துக்காக கணவரை கொலை செய்த இரண்டாவது மனைவி..!

Byவிஷா

Nov 16, 2023

விருதுநகரில் பேக்கரி கடை உரிமையாளர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சொத்துக்காக அவரது 2வது மனைவியே, கணவரை கொலை செய்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(43). இவர் பழைய பேருந்து நிலையம் எதிரே பேக்கரி கடை மற்றும் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இவரது கடையில் வேலை பார்த்து வந்த காளீஸ்வரி (23) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடையில் போதிய வருமானம் இல்லாததால் அதை மூடிவிட்டு சென்னையில் பிரபல ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வந்தார். மனைவி காளீஸ்வரி, மகனுடன் ராஜபாளையம் வீட்டில் தனியாக வசித்து வந்தார். தீபாவளியை முன்னிட்டு சிவக்குமார் சென்னையில் இருந்து ராஜபாளையம் வந்து மனைவி, மகனுடன் தீபாவளி கொண்டாடிவிட்டு, மாலையில் நகராட்சி குப்பைமேடு பகுதியில் உள்ள தந்தையின் சமாதியை பார்வையிட சிவக்குமாரும், அவரது மனைவி காளீஸ்வரி சென்றுள்ளனர்.
அப்போது சிவக்குமாரின் இடத்துக்கு அருகே 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை சிவக்குமார் கண்டித்த போது ஆத்திரமடைந்த 3 பேர் கொண்ட கும்பல் சிவக்குமாரை மனைவி கண்முன்னே அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே சிவக்குமாரின் 2வது மனைவி காளீஸ்வரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து 2வது மனைவி காளீஸ்வரியே கொலை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், சிவக்குமாருக்கு சொந்தமான வீடு சுப்புராஜா மடத்தெருவில் உள்ளது. இந்த வீட்டில் ஐயப்பன் (27) என்ற யோகா மாஸ்டர் வாடகைக்கு வசித்து வந்தார். சிவக்குமார் சென்னை சென்ற பிறகு ஐயப்பனுக்கும், காளீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த சிவக்குமார் மனைவியை கண்டித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது.
இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாலும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஆட்டையை போடுவதற்காக சிவக்குமாரை ஊருக்கு வரவழைத்து தந்தையின் சமாதியை வழிபட அழைத்து சென்று கள்ளக்காதலன் ஐயப்பன் மற்றும் விக்னேஷ் (27), மருதுபாண்டி (22) கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சிவக்குமாரின் மனைவி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.