தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நள்ளிரவில் ஜவுளிக்கடை தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புளியங்குடி ஜின்னா நகர் மூன்றாம் தெருவைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் முகைதீன் பிச்சை. இவர் புளியங்குடி காந்தி பஜார் சங்கர விநாயகர் கோவில் தெருவில் ரெடிமேடு கடை நடத்தி வருகிறார். தீபாவளி வியாபாரம் பரபரப்பாக விற்பனை இருந்ததால் இரவு 11 மணிக்கு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். சுமார் இரவு 12.30 மணியளவில் கடைக்குள் இருந்து புகை வந்ததைக் கண்டு பக்கத்தில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜாராம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா கடையநல்லூர் நிலைய அலுவலர் குணசேகரன் சங்கரன்கோவில் நிலைய அலுவலர் விஜய் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை போராடி அணைத்தனர்.
இதில் சுமார் ஐம்பது லட்ச ரூபாய் மதிப்பிலான ரெடிமேடு ஆடைகள் தீயில் கருகியது. இத்தகவலை அறிந்த ஜின்னா நகரை சேர்ந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்களுடன் உதவி செய்தனர். மேலும் புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் போலீசார் உடன் செயல்பட்டனர். நள்ளிரவில் நடந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.