மருதுபாண்டியர்கள் குருபூஜை மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க ஜெயந்தி விழாவை முன்னிட்டு நினைவிடங்களுக்கு செல்வது குறித்த அனுமதி மற்றும் கட்டுப்பாட்டுகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பார்வர்ட் பிளாக் கட்சி, மருதுசேனை, தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின் போது விழாக்களுக்கு பொதுமக்கள் செல்ல சொந்த வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி, ஜோதி ஓட்டம், அன்னதானம், பட்டாசு, கலைநிகழ்ச்சி, விளையாட்டு போட்டி, ஒலிப்பெருக்கிக்கு தடை, மாவட்டம் தாண்டி இரு சக்கர வாகனத்தில் செல்ல தடை ஆகிய கட்டுப்பாடுகளை அதிகாரிகள் அறிவித்தபோது கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதனையடுத்து அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் கூட்டத்தை புறக்கணித்தும் வெளியேறினர்.
மருதுபாண்டியர்கள் குருபூஜை தொடர்பாக தனியாக ஆலோசனை நடத்தகோரி, அகமுடையோர் அமைப்பினர் கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கூட்டத்தின் முடிவில் பேசிய மாவட்ட ஆட்சியர், முத்துராமலிங்கதேவர், மருதுபாண்டியர்களை தெய்வமாக பொதுமக்கள் வணங்கிவரும் நிலையில் விழாவை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விழாக்களுக்கு தேவையான அனுமதிசீட்டு வழங்குவது குறித்து ஆட்சியர் அலுவலகத்திலயே உதவிமையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும், கொரோனா காலகட்டம் என்பதால் விழாவிற்கான நெறிமுறைகள் வழிமுறைகள் குறித்து இன்று காலை வெளியிடப்படும் என தெரிவித்தார்.