• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில் மூன்று நாட்கள் தெப்ப உற்சவம்..!

Byவிஷா

Aug 8, 2023

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
உலக பிரசித்தி பெற்றதும், அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடுமான திருத்தணி முருகன் கோவில், முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். இங்கு ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆடிக்கிருத்திகை தெப்பதிருவிழா புகழ் பெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு முருகன் அருள் பெற்று செல்வர்.
தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமும், தை மாதமான உத்தராயன புண்ணிய காலமாக தை மாதத்தில் வரும் கார்த்திகையும் சிறப்பாக முருகப்பெருமான் ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதுபோல ஆடிக்கிருத்திகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முருகன் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும். இதையொட்டி, முருகனுக்காக பலரும் விரதம் இருக்கின்றனர். கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள பிள்ளைகளை அருளுவார் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகைத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படஉ ள்ளது. இன்று ஆடி பரணி விழாவை முன்னிட்டு முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். நாளை ஆடிக்கிருத்திகை விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணியில் குவிந்து வருகின்றனர்.
ஏராளமான பக்தர்கள் பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இன்று ஆடி பரணி விழாவை முன்னிட்டு முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. முதல்நாள் தெப்ப உற்சவம் மாலை 7 மணி அளவில் மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்தில் நடக்கிறது. காவடி மண்டபத்தில் இருந்து வள்ளி தெய்வானை முருகப்பெருமான் உற்சவர் தேர் வீதி வலம் வந்து படிக்கட்டுகள் வழியாக சரவணப் பொய்கை குளத்திற்கு ஊர்வலமாக வந்து தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இதையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.