வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், இன்று டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தியாவில் மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்ட நாடாளுமன்றம் டெல்லியில் இருக்கிறது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை இடிக்காமல் சென்டிரல் விஸ்டா திட்டத்தின் கீழ் அதற்கு அருகிலேயே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்டினர். கடந்த 2019இல் பிரதமர் மோடி இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். கொரோனா காலத்திலும் இதற்கு மட்டும் சிறப்பு அனுமதி வாங்கி கட்டிட பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இதன் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இன்று பிரதமர் மோடி இதை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்நிலையில் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம், காலை 11.23 மணியளவில் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். டெல்லி மட்டுமின்றி, சண்டிகர் உட்படப் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட நாளில் நிலநடுக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.