லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்–2’ திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.
பிரம்மாண்ட தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிப்பில், மாபெரும் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத் குமார், விக்ரம் பிரபு, சோபிதா துளிபாலா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான் என பல நட்சத்திர நடிகர்களைக் கொண்ட இந்தப் படம் அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டது.
‘பொன்னியின் செல்வன்–1’ படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதியன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றது.
இதன் அடுத்த கட்டமாக படத்தின் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் வரிகளில், சக்தி ஶ்ரீகோபாலன் பாடிய.. வந்தியத்தேவன்(கார்த்தி), குந்தவை (திரிஷா) இடம் பெறும் காதல் பாடலாக ‘அக நக முகநகையே’ என்ற பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவையும், தோட்டா தரணி கலை இயக்குநராகவும், ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பாளராகவும் மற்றும் பல நட்சத்திர தொழில் நுட்ப வல்லுநர்கள் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
தற்போது இந்தப் படத்திற்கான பின்னணி இசை கோர்ப்பு லண்டனில் உள்ள Abbey Road Studios நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது. படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குநர் மணிரத்னத்தின் மேற்பார்வையில் இந்தப் படத்திற்கு பின்னணி இசையை அமைத்து வருகிறார்.