திருவனந்தபுரம்: சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தி தீபாராதனை நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில், இந்தாண்டு மண்டல கால பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் நவ. 17ம் தேதி தொடங்கியது. கடந்த இரு ஆண்டுகளாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதால் இந்த ஆண்டு சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. தினமும் சராசரியாக 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை பக்தர்கள் வந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று (27ம் தேதி) நடக்கிறது. .இன்று மதியம் 12.30 மணியில் இருந்து ஒரு மணிக்கு இடைப்பட்ட காலத்தில் சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெறும். இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தொடர்ந்து இரவு கோயில் நடை சார்த்தப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் மாதம் 30ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும். 28, 29 தேதிகளில் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும்.