அரசு போக்குவரத்து தொழிளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக, மாற்று ஓட்டுநர்கள் வைத்து போலீசார் பாதுகாப்புடன் 90சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தனர். அதன்படி கோவை மண்டலத்திற்க்கு உட்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாத தொழிற்சங்கத்தை சார்ந்த ஓட்டுநர், நடத்துனர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பயிற்சி பெற்ற வெளி ஓட்டுநர்களின் பட்டியல் பெறப்பெற்று அனைத்து பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஓய்வு பெற்ற ராணுவ ஓட்டுனர்களை வைத்து இயக்கவும் நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 23 பணிமனைகள் மூலம் மாற்று ஓட்டுநர்களை வைத்து சுமார் 1250 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சுமார் 90 சதவீத பேருந்துகள் காலை முதல் இயக்கப்பட்டு வருவதால் கோவை, உக்கடம், சிங்காநல்லூர், காந்திபுரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.