இந்தியாவில் போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனையும்,10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று
நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு கடந்த 2023-24-ம் நிதி ஆண்டில் 98.40 லட்சம் வெளிநாட்டினர் வந்துள்ளனர். அப்படி வரும் வெளிநாட்டினரின் வருகை இந்தியாவுக்குள் நுழையும் பாஸ்போர்ட் சட்டம் (1920), வெளிநாட்டினர் பதிவு சட்டம் (1939), வெளிநாட்டினர் சட்டம் (1946), குடியுரிமை சட்டம் ஆகிய 4 சட்டங்களால் தற்போது நிர்வகிக்கப்படுகிறது. இந்த சட்டங்களின்படி, வெளிநாட்டினருக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில் ஏற்கெனவே உள்ள நான்கு சட்டங்களுக்குப் பதிலாக குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025- எற் புதிய மசோதாவை உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. கடந்த 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ப்பட்ட இந்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இந்த புதிய மசோதாவில் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், குடியுரிமை தொடர்பான எந்த அம்சமும் இடம்பெறவில்லை. இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுதல், அனுமதிக்கப்பட்ட நாட்களைத் தாண்டி வெளிநாட்டினர் தங்கியிருத்தல் ஆகிய பிரச்சினைகளை கையாள இம்மசோதா பயன்படுகிறது.
இந்த புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி, : இந்தியாவில் போலி பாஸ்போர்ட், போலி விசா பயன்படுத்தி ஒருவர் நுழைந்தாலோ, தங்கியிருந்தாலோ அல்லது இந்தியாவை விட்டு வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டாலோ, 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
மேலும், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும், வெளிநாட்டினர் தங்கியிருக்கும் தகவலை உணவகங்கள், பல்கலைக்கழகங்கள், இதர கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் , நர்சிங் ஹோம்கள் ஆகியவை தெரிவிப்பது கட்டாயம் ஆகும். அதன்மூலம் வெளிநாட்டினர் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும்.
மேலும், விமானம் மற்றும் கப்பல்களில் வெளிநாட்டினர் வரும் தகவல்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும், கப்பல் நிறுவனமும் அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிப்பது அவசியம். வெளிநாட்டினர் அடிக்கடி நடமாடும் இடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.