துணை மேயர் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்; திமுக வட்ட செயலாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை, ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெரு பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் மாநகராட்சி துணை மேயர் தி. நாகராஜன் மீது நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கூலிப்படையினைரை ஏவி விட்டு அரிவள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தி அவருடைய இருசக்கர வாகனம் மற்றும் அலுவலகத்தை தாக்கிய நபர்கள் மீதும் கொலை செய்ய தூண்டிய நபர்கள் மீதும் விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தினரையும் கண்டித்தும் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைதொடர்ந்து மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் வீடு, அலுவலகத்தில் நேற்று மாலை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் துணை மேயர் நாகராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் 80வது வார்டு திமுக வட்ட செயலாளர் கண்ணன், துணை வட்ட செயலாளர் முத்து வேல் உள்ளிட்ட 6 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.