• Sat. Apr 20th, 2024

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு

Byகாயத்ரி

Feb 8, 2022

தமிழகத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவகாரத்தில் மாநில அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் அரசாணையின் நிலைப்பாட்டை ஏற்று நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கலாம் என உயர்நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீடு வழக்கில், ‘‘மாநில அரசு பிறப்பித்த அரசாணைக்கு எந்த தடையும் கிடையாது’’ என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த என்.கார்த்திகேயன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் புதிய ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் முடிவு பாகுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். மனு உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *