• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய 4வயது சியா

ByVasanth Siddharthan

Apr 7, 2025

பழனியில் நான்கு வயது பெண்குழந்தை‌ கணிதம் குறித்த கேள்விக்கு, அசாத்தியமாக பதில் அளிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வசித்துவருபவர் சிவசுப்ரமணி. ஐடி ஊழியரான சிவசுப்ரமணியின் மனைவி சிந்துஜா தமிழ்நாடு மாநில ஒலிம்பியாட் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர்களுக்கு நான்கு வயதில் சியா என்ற பெண்குழந்தை ஒன்று உள்ளது‌. குழந்தை சியா தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வருகிறார். இந்நிலையில் குழந்தை சியா கணிதத்தில் ஆர்வம் கொண்டவராக விளங்குகிறார். தனது மூன்றாவது வயதிலேயே கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என அனைத்து விதமான கணிதமும் கற்றுள்ளார். கணிதத்தில் கை‌தேர்ந்த குழந்தையான சியாவிடம் கணிதம் குறித்து, எவ்வளவு சிரமமான கேள்வி எழுப்பினாலும், உடனடியாக பதில் சொல்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. மேலும், சியா சிலம்பத்திலும் அதிக ஆர்வத்துடன் கற்று வருகிறார்.

இது குறித்து அவர்களது பெற்றோர் கூறும்போது..,

குழ்நதை சியா கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக கணிதம் கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும், 2ம்‌வகுப்பு முதல் 4ம்‌வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை தற்போதே வாசிக்கத் துவங்கி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். குழந்தை சியாவிற்கு இயல்பாகவே கற்றல்திறன்‌ அதிகமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் குழந்தை சியா இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு, ஒலிம்பியாட் நட்சத்திர திறமையாளர், ஓவியக்கலையில் மைசூர் அரசு விருது, 2024 அபாக்கஸ் சாம்பியன், மாநில அளவிலான சிலம்பத்தில் முதலிடம் என பல்வேறு சாதனைகளை குவித்துள்ளார்.

குழந்தை சியாவிற்கு தனிப்பட்ட முறையில் எவ்வித சிறப்பு பயிற்சிகளும் அளிக்கவில்லை என்றும், மற்ற குழந்தைகளுக்கு வீட்டில் சாதாரணமாக கொடுக்கும் பயிற்சி போலவேதான் கற்றுக் கொடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் சியா தொலைக்காட்சி மற்றும் செல்போன் ஆகியவற்றை‌ அதிகம் விரும்பி பார்ப்பதுமில்லை என்றும் தெரிவிக்கின்றனர். நான்கு வயதே ஆன பெண்குழந்தை ஒன்று கணிதத்தில் சிறந்து விளங்குவதும், கணிதம் குறித்து கேள்விக்கு அசாத்தியமான பதிலை தருவதும், பல்வேறு விருதுகளை பெற்றிருப்பதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.