நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், பணியாளர்கள் 313பேரை அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டிருப்பதுதான் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றது.
நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் முறைகேட்டை தடுக்கும் வகையில், தமிழ்நாடு நுகர்பொரூள் வாணிப கழகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த கொள்முதல் பணியாளர்கள் 313 பேர் ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் விளைச்சலாகும் நெல் பெரும்பாலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. பின்னர், கொள்முதல் செய்த நெல், ஆலைக்கு அனுப்பி அதனை பொது விநியோக திட்டத்துக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உற்பத்தி செய்யக்கூடிய நெல்லில், மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் மக்கள் தாங்கள் விளைவித்த நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறைந்த பட்ச ஆதரவு விலையில் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் அங்கு ஒரு நெல் மூட்டைக்கு ரூ.40 யிலிருந்து ரூ.50 வரை லஞ்சமாக கொள்முதல் பணியாளர் கேட்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இதனால் நெல் கொள்முதல் பணிகளை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர்களை, கொள்முதல் அலுவலர்களாக அரசு நியமித்தது. ஆனால் இவர்களில் பெரும்பாலானொர் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்ததால், முறைகேடு நடப்பது குறையவில்லை என்று புகார் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் 313 கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அதிரடி உத்தரவை பிறபித்துள்ளார்.
இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 25 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 24 பேரும், நாகை மாவட்டத்தில் 7 பேரும், சென்னை தலைமையிடத்திலிருந்து 30 பேரும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 16 பேரும், மதுரை மாவட்டத்திலிருந்து 14 பேரும், தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களிலிருந்து தலா 12 பேரும் என மாநிலம் முழுவதும் 313 கண்காணிப்பாளர்கள் மண்டலம் விட்டு மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் உடனடியாக தாங்கள் பணிபுரியும் இடத்திலிருந்து விலகி பணியிடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் பணியில் சேர வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.