விருதுநகர் அருகே வி.முத்துலிங்காபுரம் கிராமத்தில் இயங்கி வந்த வனஜா என்ற பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் 6 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து அறிந்ததும் விருதுநகர் கோட்ட தீயணைப்பு அலுவலர் முத்துபாண்டி,சிவகாசி நிலைய தீயணைப்பு அலுவலர் ஸ்ரீநிவாசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மதுரை சரக டி.ஐ.ஜி அபிவ்குமார்,எஸ். பி ஸ்ரீநாதா ஆகியோர் விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் மாநில அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர் இராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதலையும் பலியானோரின் உடல்களை விரைந்து உடல் கூராய்வு செய்யும் அறிவுறுத்திய பின் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள்,துரதிர்ஷ்டவசமானது என்றும் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர் என்றும் வேறு யாரேனும் இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா என்றும் மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளதாகவும் இரவுக்குள் இப்பணி முடியும் என்றும் தேர்தல் நேரம் என்பதால் நிவாரணம் வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவு பெற்று முதலமைச்சர் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் விதிமீறலால் இந்த விபத்து நடந்துள்ளது தெரிய வருவதாகவும்,அடுத்த அரசாங்கம் அமைந்த உடன் இதுபோன்ற விபத்துகள் நடக்காவண்ணம் அதிகாரிகரிகளுக்கு அறிவுறுத்தப்படும் என்றனர்.



