பி.எஸ்.என்.எல் அலைகற்றையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பேசி வந்த கேரளாவை சேர்ந்த நபர்கள். போலீசார் ரகசிய விசாரணை.
தேனியில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இளநிலை தொலை தொடர்பு அலுவலர் முனியாண்டி என்பவர் தேனி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் பி.எஸ்.என்.எல் அலைகற்றையை சட்ட விரோதமாக பயண்படுத்தி சிலர் வெளிநாடுகளுக்கு பேசி வருவதாக புகார் கூறியிருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் தேனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். இதில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் தேனி மாவட்டத்திற்கு வந்து அல்லிநகரம் மற்றும் ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். பி.எஸ்.என்.எல் அலைக்கற்றையை சட்டவிரோதமாக அவர்கள் வைத்திருக்கும் இணைப்பு சாதனம் (டிவைஸ்) மூலமாக 10 க்கு மேற்பட்ட பிஎஸ்என்எல் சிம்கார்டுகளை பயன்படுத்தி கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு நாடுகளுக்கு பேசி வந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசாரிடம் சிக்கிய இருவரும், தீவிரவாத செயலில் ஈடுபடுவதற்காகவா? அல்லது சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக பி.எஸ்.என்.எல் அலைகற்றையை சட்டவிரோதமாக பயன்படுத்தினார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவைச் சேர்ந்த இருவர் தேனி போலீசிடம் சிக்கியதை அறிந்த மற்றொரு கேரள நபர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. சதிச்செயலில் ஈபடுவதற்காக கேரளாவில் இருந்து வந்துள்ளார்களா மேலும் பலர் பதுங்கி உள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.