தமிழ்நாட்டில் கல்வி வேலைவாய்ப்பில் பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என மதுரையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாநில தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் பேசினார்.
ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தினரின் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. மாவட்ட தலைவர் ராமச்சந்திர குமார் தலைமை தாங்கி, வரவேற்றார். பாண்டிய மண்டல தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

மாநிலத் தலைவர் நிகழ்வில்மாநிலத் தலைவர் ஓம்சக்தி ராமச்சந்திரன், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது;
“தமிழ்நாட்டில் முதலியார், பிள்ளைமார் சமுதாயத்தினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வெள்ளாளர் என்ற பிரிவின் கீழ், பல உட்பிரிவுகளாக தமிழ்நாடு முழுவதும் பரவி வாழ்கின்றனர். மாநிலம் முழுவதும் நாங்கள் எடுத்த கணக்கீட்டின்படி, 2 முதல் 2.5 கோடி மக்கள் தொகை உள்ளனர். தமிழ்நாட்டின் சுமார் எட்டு கோடி மக்கள் தொகையில், 20% க்கும் அதிகமாக இந்த சமுதாயத்தைச் சேர்ந்தோர் வாழ்கின்றனர்.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கீடு எடுக்கப்பட்டால், முழு மக்கள் தொகை விவரங்கள் தெரியவரும். தமிழ்நாட்டு அரசியலை நிர்ணயம் செய்யும் எண்ணிக்கையில் உள்ளனர். எனவே, கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அரசு சலுகைகளில் 15 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மதுரை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் மதுரை முத்து. இவரது திரு உருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 31 ஆம் தேதி திறந்து வைக்கிறார். அவருக்கு எங்கள் சமூகத்தின் சார்பில் பெரிய வரவேற்பு அளிக்க இருக்கிறோம்.அவரிடமும் எங்களது கோரிக்கையை வலியுறுத்த இருக்கிறோம்” என்றார்.
செயல் தலைவர் பரிமளநாதன், மதுரை மாவட்ட துணைத் தலைவர்கள் பாக்கியநாதன், கர்னல் மணிவண்ணன், செயலாளர் கே. சண்முகசுந்தரம், இணைச்செயலாளர் குமாரவேல், துணைச் செயலாளர் ஆதவன், பொருளாளர் ஞானசேகரன் முன்னாள் மேயர் மதுரை முத்து சிலை கமிட்டி தலைவர் முத்து செயலாளர் ஜெகன்நாதன், பொருளாளர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.