• Fri. Mar 29th, 2024

எங்க கூட விவாதத்துக்கு வர தயாரா?… பிடிஆருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால்…!

By

Aug 9, 2021

திமுக தான் கொடுத்த வாக்குறுதிகளை செய்து கொடுப்பதற்கு இந்த வெள்ளை அறிக்கை தொடக்க புள்ளியா? அல்லது வாக்குறுதிகளில் இருந்து தப்பித்துக்கொள்ள வெள்ளை அறிக்கை முற்றுப்புள்ளியா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர் பி உதயகுமார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கல்லுப்பட்டி பேரூர் கழகத்தின் சார்பில் அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் அம்மா கோவிலில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி உதயகுமார் பங்கேற்று, ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:


கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி குடிநீர் வசதி ஆகியவற்றை அதிமுக அரசு உருவாக்கி கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாது முதல் அலை ஏற்பட்ட போது தன் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு அதன் மூலம் பாரதப் பிரதமரின் பாராட்டை எடப்பாடியார் பெற்றிருக்கிறார்.


கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் மின் தட்டுப்பாட்டால் இருளில் மூழ்கியிருந்தது. அதனை தொடர்ந்து அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரத்துடன் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாற்றப்பட்டது. கடந்த திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று சொன்னார்கள். அதை இன்று கேட்டால் எங்கள் மீது வழக்கு போடுகிறார்கள்.


வெள்ளை அறிக்கை எதற்கு உங்களுக்குத்தான் ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறதே சட்டசபையில் நீங்கள் விவாதத்திற்கு வைக்கலாமே. நிதிநிலை அறிக்கையில் துறைக்கான நிதி நிலை எவ்வளவு. அதனால் இழப்பு எவ்வளவு என்பது சட்டமன்றத்தில் நீங்கள் விவாதத்திற்கு வைத்தால் எல்லோரும் விவாதிக்க தயாராக இருக்கிறார்கள். நாட்டு மக்கள் குறிப்பாக அந்த விவாதத்தை காண தயாராக இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் கொடுத்த வாக்குறுதியை செய்து கொடுப்பதற்கு இந்த வெள்ளை அறிக்கை தொடக்கப்புள்ளியா? அல்லது நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து தப்பித்துக்கொள்ள நீங்கள் கொடுக்கும் இந்த வெள்ளை அறிக்கை முற்றுப்புள்ளியா? என்பதை இன்றைக்கு மக்கள் விவாதித்து கொண்டிருக்கிறார்கள்.


உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கையில் உள்ளது. அதிகாரிகளும் கையில் இருக்கிறார்கள். நீங்கள் கேட்டீர்கள் என்றால் எவ்வளவு வருவாய் இருக்கிறது, எவ்வளவு பற்றாக்குறை இருக்கிறது இவ்வளவு செலவினம் இருக்கிறது, எவ்வளவு கடன் இருக்கிறது என்று அந்த புள்ளி விவரத்தையும் தரப் போகிறார்கள்.. இதுதான் நிதிநிலை அறிக்கையின் சாராம்சம். திட்டங்களுக்காக இவ்வளவு ஒதுக்கீடு, உடனடி செலவினத்திற்காக இவ்வளவு நிதி, தொலைநோக்கு திட்டத்திற்கு இவ்வளவு செலவினம் உள்ளது என்பதை நீங்கள் நிதிநிலை அறிக்கையில் எடுத்துச் சொல்லி அதை விவாதிக்கலாம்.


ஆனால் 2011ல் இருந்து இன்றைக்கு வெள்ளை அறிக்கையாக விடுவோம் என்று சொல்லி மக்களை திசை திருப்பி இன்றைக்கு அதிமுக மீது களங்கத்தை, பழியை சுமத்த நினைத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.


கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி கொடுத்துள்ளோம். இரண்டு கோடிக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசியை வழங்கினோம். ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கினோம் உழவர்களுக்கு பாதுகாப்பு திட்டம் வழங்கினோம். இன்று கிராமப்புற வளர்ச்சிக்கு கறவை மாடுகள், ஆடுகள் திட்டம் இந்தத் திட்டங்கள் எல்லாம் இதற்கு முன்பாக வந்தது இல்லை. அதேபோல் முதியோர் ஓய்வு திட்டம் 35 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. இதற்காக 4,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.


ஆனால் கடந்த திமுக ஆட்சியில் 12 லட்சம் பேருக்குதான் வழங்கப்பட்டது. இதற்காக 1200 கோடி தான் ஒதுக்குகிறார்கள். இப்படி மக்களின் வரவேற்பை பெற்ற பல்வேறு திட்டங்களுக்கு நிதிநிலை அறிக்கையில் நிதியை ஒதுக்கி வந்தோம். ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் இருப்பது என்றால் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகத்தான். திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் தாய்மார்களுக்காக மாதம்தோறும் 1000 மாதந்தோறும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் தாய்மார்களுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அதிமுக அரசு இன்றைக்கு அமைந்திருந்தால் எடப்பாடியாரும் ஓபிஎஸ{ம் சாக்கு போக்கு சொல்லி தப்பித்திருக்க மாட்டார்கள் வாக்குறுதியை நிறைவேற்ற அவர்கள் ஆணையிட்டு இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *