திமுகவினர் பாதுகாப்பில் மணல் கடத்திய லாரியை விரட்டிச்சென்ற போலீஸ்!….
தமிழக ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ மணல் லாரிகள் ஓடுவது வாடிக்கையான ஒன்று. ஆளுங்கட்சியினர் சிலரின் லாரிகளும், மணல் மாஃபியாக்களின் லாரிகளும் ஓடுகின்றன.
விவசாயிகள் போராட்டத்தையோ, நீதிமன்ற குரலையோ கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகங்கள் தான் பெரும்பாலும் உள்ளன.
ஆட்சியர், வருவாய் அதிகாரிகள், கனிமவள அதிகாரிகள், காவல்த்துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் எதிர்கட்சி தலைவர்கள் என அனைவருக்கும் கொடுக்கப்படும் மாமூல் தொகைக்காக இந்த கொள்ளை தடுக்கப்படவில்லை.
ஆற்றின் குழந்தை மணல் என்று தசவதாரம் படத்தில் ஒரு கவிதை வரும். அப்படிப்பட்ட ஆற்றின் குழந்தையைக் கடத்தும் கும்பல்களுக்கு எதிராக இங்கே படை திரள அதிகாரிகள் தயாராக இல்லை. இந்நிலையில் மணல் லாரியை போலீசார் விரட்டிச்சென்றார்கள் என்றால் அது அதிசயம் தானே!.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே திருவேகம்பத்தூர் சருகணி நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு லாரியில் மணல் கடத்திச் சென்றதாகவும், அதன் பின்னால் திமுக கொடி கட்டிய காரும் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட திருவேகம்பத்தூர் தலைமை காவலர் புரோஸ்கான் என்ப்வர் லாரியை விரட்டிச்சென்று பிடிக்க முயன்ற போது மணல் கடத்தல்கார்கள் பிடிபடாமல் தப்பிச்சென்றுள்ளனர். இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து சருகணி பிர்கா விஏஓ சந்திரா திருவேகம்புத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து மாவட்டக் காவல்த்துறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமாரின் உத்தரவின் பேரில் துணைக் கண்காணிப்பாளர் ரமேசு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விஜயன் மற்றும் சிறுநல்லூரைச் சேர்ந்த பிரபு ஆகியோரை கைது செய்தனர்.