தேனியில் கடத்தப்பட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழக முன்னாள் மாவட்ட செயலாளர் கவுரி மோகன்தாஸ் மானாமதுரையில் மீட்பு. தேனி தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை.
தேனி மாவட்டம் போடி அருகே பொட்டல்களத்தை சேர்ந்தவர் கவுரி மோகன்தாஸ். தமிழக மக்கள் முன்னேற்ற கழக முன்னாள் மாவட்ட செயலாளரான இவர் ஹரே கிருஷ்ணா அக்ரோ என்ற பெயரில் தொழில் செய்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு இருடியம் மற்றும் போலி ஏகே 47 ரக துப்பாக்கி விற்பனை செய்த வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இவர் மீது உள்ளது. இந்நிலையில் மானாமதுரையை சேர்ந்த தொழில் அதிபர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பல கோடி பெற்றுக் கொண்டு திருப்பி தராமல் இழுத்தடித்துள்ளார். இந்நிலையில் நேற்று கவுரி மோகன் தாஸ் வீட்டில் இருந்து அவரை மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றனர். கௌரி மோகன் தாஸின் மனைவி ஜெயகிருஷ்ணன் லட்சுமி தனது கணவரை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றதாக மற்றும் மூன்றரை கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதனையடுத்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் தலைமையில் 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கவுரி மோகன்தாஸ் இருப்பதாக வந்த தகவலையடுத்து தனிப்படை பிரிவினர் விரைந்து வந்து கௌரிமோகன்தாஸை மீட்டு பாதுகாப்புடன் தேனிக்கு அழைத்துச் சென்றனர். மேலும் கடத்தல் தொடர்பாக மானாமதுரை சேர்ந்த தொழிலதிபர் குட்டி என்ற ராஜீவ்காந்தி மற்றும் அவரது ஓட்டுநர் ராஜேந்திரன் ஆகிய இருவரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களை தேனிக்கு அழைத்துச்சென்றனர். மேலும் கடத்தப்பட்ட தொடர்புடைய பிற குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கடத்தப்பட்டவர் மானாமதுரையில் பிடிபட்ட சம்பவம் மானாமதுரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.