• Mon. Jan 20th, 2025

தமிழக கோவில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்த வழக்கு!…

By

Aug 9, 2021

தமிழக கோவில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில் அச்சகர்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்று அறநிலைத்துறை விளம்பரம் வெளியிட்டது.

அதில், அர்ச்சகர்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலர் பி.எஸ்.ஆர் முத்துக்குமார் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், ஆகம விதிகளைப் பின்பற்றி தான் அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆகமவிதிப்படி முறையான பயிற்சி பெறாதவர்களை் நியமிப்பது தவறானது எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதாசுமந்த், அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும், மனுவுக்கு ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.