மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மேலவாசல் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 37) என்பவர் மீது கொலை, கொலை முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், நேற்று நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவரை அழைத்து வந்து வீட்டின் முன்பு வைத்து மர்மகும்பல் அவரை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கி படுகொலை செய்து தப்பி சென்றுள்ளது. தொடர்ந்து சம்பவம் குறித்து மதுரை திடீர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து பேச்சிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவத்தில் பேச்சிமுத்துக்கு தொடர்பு இருந்ததாகவும், அதனால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கிறது என்று தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.