விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாத்தூர் தூத்துக்குடி தண்டவாள ரயில் பாதையில் ஆண் சடலம் ஒன்று சிதலமடைந்து கிடைப்பதாக சாத்தூர் தாலுகா போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து, அங்கு சென்ற சாத்தூர் தாலுகா போலீசார் தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் உயிரிழந்தவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சடையம்பட்டி சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் மாரீஸ்வரன்(30) என்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் இவரது தம்பிக்கு திருமணம் முடிந்தது. இதனால் தனக்கு திருமணம் ஆகாமல் இருப்பதை எண்ணி மன உளைச்சலில் இருந்து வந்த மாரீஸ்வரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்றும், மாரீஸ்வரனுக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்து வந்ததாகவும் இதனால் தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். எனினும் நேற்று முன்தினம் திருமணம் முடிந்த வீட்டில் இறப்பு நிகழ்ச்சி நடந்தது அவர்களது குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.