“விரைவில், மோசமான நாட்களை சந்திக்கப் போகிறீர்கள்” என, சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜெயா பச்சன், பாஜகவுக்கு சாபம் கொடுத்தார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன். இவர், சமாஜ்வாதி கட்சியின் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு சட்ட திருத்த மசோதா மீது ராஜ்யசபாவில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதில், ஜெயா பச்சன் கலந்து கொண்டார்.அப்போது, 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஜெயா பச்சன் பேசியதாவது: “பாஜகவினர் என்னை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சிக்கின்றனர்.
எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் மற்றும் என்னை தரக்குறைவாக விமர்சித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் மோசமான நாட்களை சந்திக்கப் போகிறீர்கள் என பாஜகவினரை சபிக்கிறேன்” என்று அவர் காட்டமாக பேசினார்.