மதுரை மாடக்குளம் பகுதியில் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் திடீரென பெண்கள் நாற்றுகளை நட்டு விநோதப் போராட்டத்தில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம், பழங்காநத்தம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே, மதுரையில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் சேறும் சகதியுமாக மோசமான நிலையை எட்டியுள்ளது.இதனால் வாகன ஒட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வந்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்தநிலையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில், மாடக்குளம் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், அப்பகுதி குடியிருப்புவாசிகளுடன் சேறும் சகதியுமாக இருந்த சாலையில் இன்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிகழ்வில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.