
“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அத்தகைய பரந்த உள்ளம் கொண்ட மனிதர்கள் எல்லாம் இப்போது எங்கு இருக்கிறார்கள் ? என்கிற கேள்வி நம் எல்லோர் மனதிலும் உண்டு.
தன் பெண்டு தன் பிள்ளை சோறு, வீடு என்று வாழும் கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் தனது வாழ்நாள் முழுவதும் பிறருக்கு நிழல் தரும் மரங்களை நடுவது மட்டுமே லட்சியம் என வாழும் கோவையை சேர்ந்த யோகநாதனின் பரந்த உள்ளம் நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியது.
கோவை மாவட்டம் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் யோகநாதன், தமிழக அரசு போக்குவரத்து துறையில் நடத்துனராக பணியாற்றி வரும் இவருக்கு தனது சிறு வயது முதற்கொண்டே மரங்கள் வளர்ப்பது மீது தீராத காதல்.
நாள் தோறும் தனது வேலை முடிந்த அடுத்த கணமே மரக்கன்றுகளை நட துவங்கி விடுவார் – இது மட்டுமல்லாமல் தனது சம்பளத்தின் 50% பணத்தை மரக்கன்றுகள் வாங்குவது … நர்சரி அமைத்து பராமரிப்பது… பின்னர் அவற்றை இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பது என கடந்த 38 ஆண்டுகளாக மரங்களோடு மரங்களாக உலாவி, இதுவரை சுமார் 3.5 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்கி உள்ளார்.
பொத்தாம் பொதுவாக மரக்கன்றுகளை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் கையில் ஒப்படைத்துவிட்டு கடந்து செல்லாமல் ஒவ்வொரு பள்ளியாக சென்று அங்கு மரம் வளர்ப்பதன் பயன்கள் என்ன ? மரம் வளர்ப்பதால் எத்தனை தலைமுறைகள் பலனடையும் ? மரத்தை நடுவதோடு அதனை எவ்வாறு பராமரித்து முழுமையான மரமாக வளர்ப்பது எப்படி … போன்ற எண்ணற்ற தகவல்களை முழுமையான செயல் விளக்கங்களுடன் பாடமாக ( PPT presentation ) எடுத்து இளைய தலைமுறையினரின் மனதில் ஆழமான விதையை விதைத்து வருகிறார் யோகநாதன்.
*2008 ஆம் ஆண்டு துணை ஜனாதிபதியிடம் பசுமை போறாளி என்கிற விருது
*2011 ஆம் ஆண்டு ரியல் ஹீரோ என்கிற விருது
*2022 ஆம் ஆண்டு climate warrior off the year என்கிற விருது
*2015 திராவிட கழகம் சார்பில் தந்தை பெரியார் விருது
*டெல்லி ஐ.ஐ.டி சார்பில் பசுமை நேசர் ( green grooce ) என்கிற விருது … இப்படி எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ள யோகநாதன் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடியாலேயே பாராட்டப்பட்டுள்ளார்.
மனித இனத்துகே நற்காற்றாம் ஆக்சிஜனை வழங்கும் மரங்களை லட்சக்கணக்கில் வளர்த்த யோகநாதனுக்கு சில வருடங்கள் முன் புற்றுநோய் தாக்கியது.
58 வயது நிறைவு பெறும் யோகநாதன் இம்மாதத்துடன் தமிழக அரசு போக்குவரத்து துறையில் இருந்து பணி ஓய்வு பெறுகிறார் – ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த இவருக்கு தற்போது ஒரு நுரையீரல் செயல் இழந்து விட்டது – சோர்வும் வருத்தமும் தனது உடலுக்கு தானே தவிர …! மனதிற்கு அல்ல என்கிற இறுமாப்புடன் இயற்கை நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வரும் யோகநாதனுக்கு இதுவரை எந்தவித மருத்துவ உதவியும் கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய செய்தி…
இயற்கை பாதுகாவலனான யோகநாதனுக்கு நேச கரம் நீட்டுமா தமிழக அரசு ! மரங்களின் ராஜாவுக்கு மருத்துவ உதவி செய்வாரா முதல்வர் ஸ்டாலின்?
