பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்1, குழிவயல் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் குட்டிகளுடன் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்தனர். பின்னர் அந்த காட்டுயானைகள் காலையில் குடியிருப்பு அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றன. தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு உள்ளதால் எந்த நேரத்திலும் அவை வெளியே வரக் கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே வனத்துறையினர் காட்டு யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.