பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி 25 நாட்கள் ஆகியுள்ளது.மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக ரிலீஸ் ஆனது.இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதற்கு அடுத்தபடியாக பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் முதல் பாகத்தைப் போல் இப்படம் வசூலை வாரிக்குவிக்கவில்லை.
அந்த வகையில் இப்படம் ரிலீஸ் ஆகி . 25 நாட்களில் ரூ.350 கோடி வசூலை கூட நெருங்க முடியாமல் திணறி வருகிறது இப்படம். பொன்னியின் செல்வன் 2 எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு முதல் வாரத்தில் அமோக வரவேற்பு கிடைத்தாலும் போகப் போக வசூல் குறைய தொடங்கியது. அதன்படி இப்படம் இதுவரை தமிழ்நாட்டில் ரூ.115 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் தமிழ்நாட்டில் 205 கோடிக்கு மேல் வசூலித்தது. அதோடு ஒப்பிடுகையில் பொன்னியின் செல்வன் 2 சுமார் 90 கோடி குறைவாக வசூலித்து உள்ளது.தென்னிந்தியாவை பொறுத்தவரை ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களையும் சேர்த்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரூ.53 கோடி வசூலித்து உள்ளது. இதில் கேரளாவில் மட்டும் அதிகபட்சமாக ரூ.22 கோடி வசூலை இப்படம்குவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு வட இந்தியாவில் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இந்த முறை அங்கு வசூலை அள்ள வேண்டும் என்கிற முனைப்பில் புரமோஷன் பணிகளை சற்று தீவிரமாக மேற்கொண்டு இருந்தனர். இருந்தும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வட இந்தியாவில் குறைவான வசூலையே பெற்றுள்ளது. இப்படம் ரூ.50 கோடி கூட வசூலிக்கவில்லை.
பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை வெளிநாடுகளில் லைகா நிறுவனம் தான் வெளியிட்டது. இப்படம் இந்தியா தவிர்த்து இதர நாடுகளில் மொத்தமாக ரூ.125 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. இதில் அமெரிக்காவில் தான் அதிகளவிலான வசூல் கிடைத்துள்ளது. அதன்படி அமெரிக்காவில் மட்டும் இப்படம் ரூ.43 கோடி வசூலித்து உள்ளது.