தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளதால், அவரது அடுத்த பிரதமர் குறித்த நிலைப்பாடு நாடு முழுவதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மத்தியில் பாஜக தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியை தக்கவைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஏழரை ஆண்டுகளில் பாஜக எந்த அளவு வளர்ந்திருக்கிறதோ, அதே அளவு காங்கிரஸ்கட்சி பல இடங்களில் சரிவைச் சந்தித்துள்ளது.2014 தேர்தலுக்கு முன் பாஜக பெரியளவில் நம்பிக்கையளிக்கும் கட்சியாக இல்லை. ஆனால் மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டதால் மோடி என்ற பிம்பம் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.
எனவே மோடிக்கு எதிராக ராகுல் காந்தியை முன்னிறுத்த இம்முறை பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் தலைமை அழைத்தது. சில சந்திப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் பிரசாந்த் கிஷோர் சம்மதிக்கவில்லை என்கிறார்கள்.இந்நிலையில் தேசியளவில் பிரபலமான மற்றொரு முகத்தை புரொஜக்ட் செய்ய பிரசாந்த் கிஷோர் தயாராகிவிட்டார். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கான வியூகங்களை வகுத்த அவர் கோவாவிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்றுகிறார்.
இந்நிலையில் மம்தாவை திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மம்தா பக்கம் நகர்வதாகவும் கூறுகிறார்கள்.மூன்றாவது அணி உருவானால் அது மீண்டும் பாஜகவுக்கே சாதகமாக முடியும் என்பதை பிரசாந்த் கிஷோரே பலமுறை கூறியுள்ளார். இந்த சூழலில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இதில் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதும் தேசியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.