திண்டுக்கல் நகரின் மத்தியில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான 400 வருடங்கள் பழமையான அருள்மிகு அபிராமி அம்மன் கோவில் உள்ளது.
இங்கு ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா 12 நாட்கள் வெகு விமர்சனையாக நடைபெறும்.

திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த மாதம் 29 தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழாவின் 10ஆம் நாள் ஆன இன்று 08.05.25 பத்மகிரீஸ்வரருக்கும் அபிராமி அம்மனுக்கும் பக்தர்கள் முன்னிலையில் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பூணல் மாற்றுதல், வஸ்திரம் சாற்றுதல், மாலை மாற்றுதல், போன்ற வைபவங்கள் இனிதே நடைபெற்றது. இதனை தொடர்ந்து பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மனுக்கு திருமணம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து திருக்கல்யாணத்தை காண வந்த ஆயிரக்கணக்கான பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றிக் கொண்டனர். திருக்கல்யாண வைபோகம் முடிவடைந்த உடன் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தலைவர் சரவணன், மாநகராட்சி மேயர் இளமதிஜோதி பிரகாஷ் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருமண வைபவத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.




