மதுரையில் மாயமாகி இருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிளஸ் 1 மாணவர், ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுரை கூடல்நகர் கணேசபுரம் யோகசாமி – யோகலட்சுமி மகன் தமிழ்ச்செல்வன், 16. அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். செப்., 6ல் கிரிக்கெட் விளையாட சென்றவர் மாயமாகியும் வீடு திரும்பவில்லை.

கூடல்புதூர் போலீசில் புகார் செய்த நிலையில், நேற்றுமுன்தினம் காலை தத்தனேரி கழிவுநீரேற்று நிலையம் அருகே குட்டையில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். காயம் இருந்ததால் ‘காதல் விவகாரத்தில் நடந்த ஆணவக் கொலை. சம்பந்தப்பட்டோரை கைது செய்ய வேண்டும்’ என, அவரது பெற்றோர், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தமிழ்ச்செல்வனும், வீட்டின் அருகே வசிக்கும் 10ம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிந்ததைத் தொடர்ந்து, தமிழ்ச்செல்வனை எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே இருவரும் பரஸ்பரம் எழுதிய காதல் கடிதங்கள், வீட்டிற்கு தெரிந்தது குறித்து எழுதிய கடிதங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. தமிழ்ச்செல்வனின் இறப்பில் தொடர்புடையதாக விசாரணை நடக்கிறது.
இதற்கிடையே பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தமிழ்ச்செல்வனின் கைகள், முழங்கை மற்றும் முகத்தில் சிராய்ப்பு காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
’குட்டையில் விழுந்து இறந்திருந்தால் நுரையீரல் பகுதியில் தண்ணீர் இருந்தற்கான அறிகுறிகள் இருந்திருக்கும். ஆனால் மாணவனின் உடலில் இல்லை. வயிற்றில் 100 மில்லி அளவுக்கு வெளிர் மஞ்சள் நிற திரவம் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது விஷமா என ஆய்வுக்கு பின்னரே தெரியமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.’








