
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னிமடை பகுதிகளில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் இன்னும் அழிக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று(மார்ச் 20) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மார்ச் 16ம் தேதி மாலை மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள், சுவர் விளம்பரங்கள், பேனர்கள் ஆகியவற்றை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி – சத்திரப்பட்டி சாலையில் பாலத் தடுப்பு சுவரில் வரையப்பட்டு உள்ள அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாமல் உள்ளது. மேலும் அரசியல் கட்சி நிர்வாகிகள் காரில் உள்ள கட்சி கொடிகளை அகற்றாமல் பயணித்து வருகின்றனர். பிரதான சாலைகள் மற்றும் நகர் பகுதிகளில் உள்ள கட்சி விளம்பரங்களை அகற்றும் அதிகாரிகள், கிராமப்புறங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
