திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாணார்பட்டி யூனியன் கம்பிளியம்பட்டி ஊராட்சி சின்னக்காட்டுபட்டியில் முருகேசன் அழகேஷ்வரி தம்பதிகளுக்கு கஸ்தூரி (வயது 17) ஹரீஷ் (வயது 15) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அழகேஷ்வரி மூளை கட்டி புற்று நோயால் உயிரிழந்தார். மனைவி இழந்த சோகத்தில் வயதான தாய் வீரலட்சுமி மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த முருகேசன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். பெற்றோரை இழந்த குழந்தைகள் அவர்களின் தந்தை முருகேசன் தாயார் வயதான வீரலட்சுமி என்பவருடன் மண் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தனர். மழை காலங்களில் அந்த வீட்டில் வசிக்க இயலாத நிலையில் மிகவும் சிரமத்துடன் குடியிருந்து வந்தனர்.

இவர்களின் ஏழ்மை நிலையை அறிந்த பசியில்லா வடமதுரை எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இவர்களுக்கு உதவ முன்வந்து அவர்கள் குடியிருந்த மண்குடிசை வீட்டை அகற்றிவிட்டு தற்போது சுமார் 3 லட்சம் ரூபாய் செலவிலான ஆஸ்பெட்டாஸ் கொண்ட வீடு கட்டிக் கொடுத்தனர். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா இன்று ஊர் மக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
தங்களது புதிய வீட்டின் திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் குழந்தை கஸ்தூரி ஆர்வத்துடன் நெற்றியில் திலகமிட்டும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தார்.