மணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார். பாஜ எம்எல்ஏவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மெய்டீஸ் இனத்தினர் தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இதற்கு குக்கி என்ற பழங்குடி பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 3ம்தேதி இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது. கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
தற்போது மீண்டும் கலவரம் வெடித்துள்ள நிலையில் இதுகுறித்து முதல்வர் பிரேன் சிங் கூறுகையில்,‘‘ குக்கி தீவிரவாதிகள் தாக்குதலின்போது எம்-16, ஏகே-47, ஸ்னைப்பர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர். மெய்பீஸ் இனத்தினர் வீடுகளின் மீது தீ வைத்து எரிக்க முயன்றனர்.ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியது. இதில் 40 தீவிரவாதிகள் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். மக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட குக்கி தீவிரவாதிகள் பலரை ஜாட் படை பிரிவு வீரர்கள் கைது செய்துள்ளனர் ’’ என்றார்.இதற்கிடையே, இம்பால் மேற்கு உரிபோக்கில் உள்ள பாஜ எம்எல்ஏ கிவைரக்பாம் ரகுமணி சிங்கின் வீட்டை வன்முறையாளர்கள் தீ வைத்துகொளுத்தினர் என பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.