மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட அவனியாபுரம் மந்தை திடலில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா மக்களிடம் வாக்கு சேகரித்தார், பின்னர் வி.வி.ராஜன் செல்லப்பாவிற்கு ஆதரவாக அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் விந்தியா பிரச்சாரம் செய்தார்.

பின்னர் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசுகையில் “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ரோப் கார் அமைத்து தரப்படும், அதிமுக வெற்றி பெற்றவுடன் இல்லம் தோறும் 10,000 ரூபாய் கொடுக்கப்படும். சாலை, குடிநீர், பாதாள சாக்கடை வசதிகள் செய்து தரப்படும், திருப்பரங்குன்றம் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன்” என பேசினார்.

பின்னர் விந்தியா பேசுகையில் “காவேரி, முல்லை பெரியாறு என மக்களின் ஜுவாதார உரிமைகளுக்காக நீதிமன்றத்திற்கு செல்லவில்லை, ஆனால், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை விவகாரத்திற்கு நீதிமன்றம் சென்றது, திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா தொகுதியின் செல்லப்பிள்ளை, திருப்பரங்குன்றம் தொகுதியை ராஜன் செல்லப்பா தங்கம் போல ஜொலிக்க வைப்பார், சட்டமன்ற தொகுதி கில்லி விளையாடும் இடமில்லை, புதிதாக கட்சி தொடங்கியவர்கள் தள்ளி போய் விளையாட வேண்டும், விஜய் அடுத்த எம்.ஜி.ஆர் நான் தான் என கட்சி தொடங்கினார், விஜயை பார்க்க வந்து 41 பேர் உடல் நசுங்கி இறந்தார்கள், விஜயின் சேர்க்கை சரியில்லை.

உதயநிதி ஸ்டாலின் மக்கள் பிரச்சினைகளை பேசாமல் சட்டமன்றத்தில் தூங்கி கொண்டு இருக்கிறார், திமுக 5 ஆண்டுகள் மக்களுக்கு எதுவும் செய்யாமல் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்ற நினைக்கிறது, பெண்கள் சுதந்திரமாக தமிழகத்தில் நடமாட முடியவில்லை, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திருப்பரங்குன்றம் தொகுதி வளர்ச்சி பாதைக்கு செல்லும், அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் நிரைவேற்றப்படும்” என கூறினார்.



