புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலம் தழுவிய அளவில் நடை பெற்று வரும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்களும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் அமர்ந்து காத்திருக்கின்றனர். அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது குறித்து புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பு தலைவர் செல்லையா கூறுகையில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முன்னாள் முதல்வர் எங்களுக்கு அறிவித்த சலுகையை இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறைத்து விட்டார். எங்களது கோரிக்கையை திமுக மட்டுமல்ல அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் எங்களை கண்டுகொள்ளவில்லை. எங்களது கோரிக்கைகள் கிடப்பில் போட்டு விட்டார்கள்.

நாங்களும் 30 ஆண்டுகளுக்கு மேலாக எத்தனையோ போராட்டங்களை நடத்தி விட்டோம். ஆனால் எந்த அரசும் செவி சாய்க்கவில்லை. இப்போது அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் அந்தந்த தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து கிராம அலுவலக ஊழியர்கள் வந்து கலந்து கொண்டிருக்கிறோம். வரும் 24ஆம் தேதி தொடங்கி நாங்கள் எந்த இடத்தில் எல்லாம் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோமோ அதே இடத்தில் சமையல் பொருட்கள் கொண்டு வந்து சமைத்து சாப்பிட்டுவிட்டு இரவு பகலாக போராட்டம் நடத்துவதாக உத்தேசம் செய்துள்ளோம். இது மாநிலத் தலைமை எங்களுக்கு அறிவித்திருக்கிறது. மேலும் இது குறித்து மாநில தலைமை என்னென்ன நெறிமுறைகள் வகுத்துக் கொடுக்கின்றனவோ அதன்படி நாங்கள் காத்திருப்பு போராட்டத்தில் மட்டுமல்லாது மற்ற போராட்டங்களிலும் ஈடுபட இருக்கிறோம் என்றார்.
வட்டாரத் தலைவர் லட்சுமி கூறுகையில் ஆண்களுக்கு எவ்வளவு பணி சுமை இருக்கிறதோ அதே அளவுக்கு பெண்களாகிய எங்களுக்கும் இருக்கிறது. இரவு நேரத்திலும் பணி செய்ய வேண்டி இருக்கிறது. அந்த நேரங்களை நாங்கள் குடும்பங்களை கவனித்துக் கொள்ள முடிவதில்லை. அந்த அளவுக்கு நாங்கள் உழைக்கிறோம். ஆனால் எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்க மறுக்கிறது என்றார்.






