• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வைகாசி விசாகம்: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Byவிஷா

Jun 9, 2025

இன்று வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி முருகனை சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திர தினம், வைகாசி விசாக பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகத் திருவிழா இன்று (ஜூன் 9) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
மாலை 4 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை ஆனதும், சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் வந்து சேர்கிறார். அங்கு முனிகுமார்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.
விசாகத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்னர். அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிகிணற்றில் புனித நீராடி, நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் ஏராளமானோர் பாத யாத்திரையாக வந்தும், அலகுகுத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் மேற்பார்வையில் போலீஸார்பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.அருள்முருகன், கோயில் இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.