தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் இன்று (டிச.23) காலை காலை 10 மணிக்கு பாரம்பரிய தானிய உணவு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தேனி புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த இந்த ஊர்வலத்தை பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, தி.மு.க., நகர பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் முன்னிலை வகித்தனர். பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய பகுதிகளின் வழியாக வந்து மீண்டும் பஸ் ஸ்டாண்டை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சிறு மற்றும் குறு தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் பாரம்பரிய சத்தான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு, கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. மேலும் கீரைகள், காய்கறிகள் மற்றும் பழவகைகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கண்காட்சியை கண்டுகளித்தனர். வேளாண் துணை இயக்குனர் அனுசுயா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.