சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், ஒரு மாதம் நடைபெற உள்ள மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர், உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடைபெறுவதால் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. 1.43 கோடி சுகாதார பணியாளர்களும், உள்ளாட்சி அமைப்புகளும் தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடத்த உதவுவதாக கூறியதால், நாளை நான்காவது தடுப்பூசி முகாமை நடத்த தயாராகி வருகிறோம்.
தற்போது கையிருப்பில், 24 லட்சத்து 98 ஆயிரத்து 365 தடுப்பூசிகள் உள்ளன. இந்த தடுப்பூசிகள், நாளை நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாமில் செலுத்தப்படும். அந்த வகையில் 20 ஆயிரம் இடங்களில் நடக்கும் முகாம்களில், காலை 7:00 முதல் மாலை 7:00 மணி வரை தடுப்பூசி போடப்படும்.
அக்டோபரில் 1.23 கோடி தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூடுதலாக தடுப்பூசி பெற்று, 1.50 கோடி பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதைதொடர்ந்து, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த, சர்வதேச முதியோர் தினத்தை ஒட்டி, முதியோருக்கான விழிப்புணர்வு கையேட்டை, அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு வெளியிட்டனர்.
இதையடுத்து, சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் நடந்த ரத்த தான முகாமை, அமைச்சர் சுப்பிரமணியன் பார்வையிட்ட பின் அளித்த பேட்டியில், ”போராடும் செவிலியர்களிடம் பேச்சு நடத்தியுள்ளோம். அனைவரையும், இரண்டு மாதத்தில் பணி நிரந்தரம் செய்வது என்பது சாத்தியமில்லாதது,” என்றார்.