சிலர் சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரமும் பெறுகிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பூமிநத்தம் பகுதியில் கடந்த 24-ம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆறுதல் தெரிவித்ததுடன், தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்.
அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசுகையில், ” சிலர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்து விட்டு, சொத்தை சேர்த்து, இளமை காலத்தை எல்லாம் சொகுசாக வாழ்ந்து, சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரமும் பெறுகிறார்கள். அவர்கள் இதுபோன்று ஊர் ஊராகச் சென்று பேசத் தேவையில்லை. உடனே கட்சி தொடங்கலாம்; ஆட்சி அதிகாரத்தையும் பெறலாம்.
ஆனால் நான் கடந்த 35 ஆண்டுகளாக வாழ்க்கையை முழுமையாகத் துறந்து, தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல், சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடாமல், எனது இளமை முழுவதையும் இழந்து தான் இந்த இடத்தை எட்டிப் பிடிக்க முடிந்தது. மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, இவ்வளவு பெரிய இழப்பைச் சந்தித்துத் தான், வாழ்க்கையைத் துறந்து தான் இந்த இடத்தை எட்டிப் பிடிக்க முடிந்தது. நான் ஒரு சராசரி அரசியல்வாதியாக இருந்திருந்தால், என்றோ இந்தக் கட்சிக்கு அங்கீகாரம் பெற்றிருக்கும். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது” என்றார்.





